சென்னை: சென்னையில் சனிக்கிழமைகளில், பழைய சோபாக்கள், படுக்கைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை வீடுகளுக்கே சென்று பெறும் சேவையில் இதுவரை, 470.33 டன் பொருட்களை மாநகராட்சி சேகரித்து அகற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில், தினசரி 6,500 டன் திடக்கழிவு அகற்றப்பட்டு வருகிறது. அதேநேரம், பழுதடைந்த சோபாக்கள், படுக்கைகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை, மாநகராட்சி பெறாததால், அவர்கள் குப்பை தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் போட்டு வந்தனர். இதனால், அப்பகுதி அசுத்த நிலையில் காணப்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை தோறும் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், படுக்கைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 94 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 42.89 டன் பழைய பொருட்கள் நேற்று சேகரிக்கப்பட்டன. இப்பொருட்கள், கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்து சென்று, விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. இந்த பணியில், 62 வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை, 1,288 வீடுகளில் இருந்து, 470.33 டன் பயன்பாடற்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. எப்படி சேவை பெறுவது? ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும், இச்சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் முன்கூட்டியே, மாநகராட்சியின், 'நம்ம சென்னை' செயலியில் பதிவு செய்யலாம். அதேபோல், 1913 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும், 94450 61913 என்ற வாட்ஸாப் எண்ணிலும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், மாநகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமைகளில் வந்து வீடுகளிலேயே பழைய பொருட்களை பெற்றுக் கொள்வர்.