சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர். வடிகால்வாய் உள்ளிட்ட பணிகளுக்கு, 8,000 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போது தண்ணீர் செல்ல வழியில்லாததால், ஆங்காங்கே மோட்டார்கள் வைத்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், வீட்டுக்கு ஒரு மோட்டார் தரலாமே என, பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர். வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழந்தபோதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் - செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. சிரமம் தீவு போல் இருப்பதால், அன்றாட விஷயங்களை செய்ய முடியாமல், குடியிருப்பு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பெரும்பாலான பகுதிகளில் டிராக்டர், மோட்டார் வாயிலாகவே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கொளத்துார், பெரம்பூர் பகுதிகளில் மோட்டார் வாயிலாக கால்வாயிலும், பள்ளமான சாலையில் இருந்து மேடான பகுதிக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டது. இங்குள்ள கால்வாய்களை ஆக்கிரமித்து, தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளை அமைத்ததால், மழைநீர் செல்ல வழியில்லை. தவிர, வெள்ள நீரை ஓட்டேரி நல்லான் கால்வாயிலேயே அதிகப்படியாக வெளியேற்றியதால், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. கொளத்துார் ஜி.கே.எம்., காலனி, கதிர்வேடு, ரெட்டேரி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதிகளிலும், சாலை முழுதும் மழைநீர் தேங்கியிருந்தது. மேலும், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை நுழைவாயிலில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி காணப்பட்டது. நுங்கம்பாக்கம் புஷ்பா நகரிலும் தண்ணீர் தேங்கியது. தொடர் மழை சென்னை மாநகராட்சியில், ஆண்டுதோறும் ஏற்படும் மழைக்கால பாதிப்புகளை தடுக்க, அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், தலா 4,000 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் இணைப்பு வடிகால்வாய், பழுது சீரமைப்பு, துார்வாரும் பணிக்காக, 30 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை என, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி செலவிட்டு வருகிறது. இவ்வளவு பணிகள் நடந்தாலும், சென்னை மாநகராட்சியின் வடிகால்வாய்களில் மழைநீர் செல்வதில்லை. அதனால், இந்தாண்டு மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க, இரு மாதங்களுக்கு முன்னரே, வாடகை அடிப்படையில், 1,496 மோட்டார்கள் ஒப்பந்தம் வாயிலாக எடுக்கப்பட்டன. அவை, அதிக தண்ணீர் தேங்கும் சுரங்கப்பாதைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டன. இவற்றின் வாயிலாகவே மாநகராட்சி பணியாளர்கள், நீரை வெளியேற்றி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில், 8,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, மழைநீர் கால்வாய் அமைத்திருந்தனர். தற்போது, இரண்டு நாட்களாக மிதமான தொடர் மழையே பெய்தது. பலத்த மழை இல்லாத நிலையில், இதையே சமாளிக்க முடியவில்லை. பெரும்பாலான பகுதிகளில், மோட்டார் வாயிலாகவே தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. மழைநீர் கால்வாய்களை, எதற்கு இவ்வளவு கோடி ரூபாய் செலவழித்து அமைத்தனர் என்றே தெரியவில்லை. பேசாமல் வீட்டுக்கு ஒரு மோட்டாரை இலவசமாக கொடுத்து இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். மோட்டார்களை வாடகைக்கு வாங்கியது ஏன்? சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் பாதிப்பு குறித்து, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், மாநகராட்சி அதிகாரிகளுடன், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து, மழைநீரை விரைந்து வெளியேற்ற அறிவுறுத்தியதுடன், பாதிப்பு தன்மையையும் கேட்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், இரண்டு நாட்களில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. எண்ணுாரில் அதிகபட்சமாக, 26 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை பெய்தபோதும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேக்கம் இல்லை. சென்னையில், மெட்ரோ ரயில் பணி, நெடுஞ்சாலை மேம்பால பணி உள்ளிட்டவை நடைபெறுவதால், பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வாடகை அடிப்படையில் மோட்டார்கள் பெறப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. இவை தற்காலிகம் என்பதால் தான், மோட்டார்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -