சென்னை: 'மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில் நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி குறித்து, ஹிந்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை, அதே பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராகவேந்திர கார்த்திக் என்பவர், குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்த குத்தகையை பதிவு செய்யும்படி, சைதாப்பேட்டை சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராகவேந்திர கார்த்திக் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குத்தகையை பதிவு செய்யும்படி, கடந்தாண்டு ஜூனில் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரேணுகா என்பவர் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவில், 'குத்தகை காலத்தை குறிப்பிடாமல், சந்தை மதிப்பைவிட குறைவாக வாடகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சொத்துகளை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படும்' என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், முகமது சபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சொத்துகளை நிர்வகிப்பதில் தவறான நிர்வாக குளறுபடி உள்ளது எனக்கூறி, அறநிலையத்துறைக்கு புகார்கள் அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மேல்முறையீடுதாரர் குற்றம் சாட்டி உள்ளார். எனவே, நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி புகார் தொடர்பாக, கூடுதல் கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து, அறநிலையத்துறை கமிஷனர் விசாரணை நடத்த வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, விசாரணையை முடித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கோவில் பொது கோவிலா, இல்லையா என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்து, நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கக்கூடாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.