ரூ.2 கோடி தங்க கட்டிகளுடன் வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம்
கொருக்குப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில், தங்க நகை பட்டறையில் வேலை செய்த மேற்கு வங்க தொழிலாளர்கள் நான்கு பேர், 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை திருடி, ஓட்டம் பிடித்தனர். பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ், 35; அதே பகுதியில், 10 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் பிகரா, கவுதம் சந்த், சஜன் ராஜ், விகாஸ், திலீப், பப்பன்ராய், நாராயணன் மைட்டி, மன்சூகுல்லா உள்ளிட்ட எட்டு பேர், வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவரது நகைப்பட்டறையில் இருந்த கார்த்திக் பிகரா, பப்பன் ராய், நாராயணன் மைட்டி உட்பட நான்கு பேர், திடீரென மாயமாகினர். பட்டறை உரிமையாளர் ஹரிஷ், நான்கு பேரை தொடர்பு கொண்ட போது, அவர்களது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ், பட்டறையில் தங்க கட்டிகள் சரியாக உள்ளனவா என சோதனை செய்தபோது, 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றே முக்கால் கிலோ தங்க கட்டிகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து ஹரிஷ் அளித்த புகாரையடுத்து, கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து, நகை பட்டறையில் சோதனை மேற் கொண்டனர். இதில், கடையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் 'ஹார்ட் டிஸ்க்' உபகரணத்தையும், நால்வரும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.