ராயபுரம்: 'துாய்மை பணியாளர்களுக்கு, 'ராம்கி நிறுவனம்' சம்பளம் தராமல் இழுத்தடித்து வருகிறது' என, ராயபுரம் மண்டல கூட்டத்தில், மண்டல குழு தலைவரே குற்றம் சாட்டினார். ராயபுரம் மண்டல குழு கூட்டம், தி.மு.க., வை சேர்ந்த மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில், நேற்று நடந்தது. இதில், உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொறியாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு பேசுகையில்,' 'துாய்மை பணியாளர்கள் 66 பேருக்கு, ராம்கி நிறுவனம் சம்பளம் தராமல் உள்ளது. இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை வழங்க வேண்டும். நிறுவன அதிகாரிகள் கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை,'' என்றார். கூட்டத்தில், 62வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெகதீசன் பேசுகையில், ''சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையை சுற்றிய பல்வேறு தெருக்களிலும், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், நடந்து செல்லவே மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இன்னும் தீர்வு காணப்படவில்லை,'' என்றார். கூட்டத்தில், சூரியநாராயணன் செட்டி தெரு, ஷேக் மேஸ்திரி தெருக்களில், 4.37 கோடி ரூபாய் செலவில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளவது உட்பட, 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிருபர்கள் வெளியேற்றம்
கூட்டத்தில், பல்வேறு கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர். அப்போது, நிருபர்கள் வந்துள்ளதை அறிந்த, மண்டல குழு தலைவர், 'எங்கள் குடும்ப விபரங்களை பேசுகிறோம். நிருபர்களுக்கு அனுமதி இல்லை' எனக்கூறி, நிருபர்களை வெளியேற்றினார்.