| ADDED : டிச 02, 2025 06:40 AM
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அரங்கநாத பெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ, மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை நடந்தது. பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர், பக்தர்கள் பங்கேற்றனர்.