கோவை: காந்திபுரத்தில் உருவாகி வரும் செம்மொழி பூங்காவில், இன்னும் வேலைகள் முடியாததால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்படவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்காததால், மக்கள் பாதுகாவலர்களிடம் விசாரித்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.கோவை, காந்திபுரத்தில் ரூ.208.50 கோடியில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படுகிறது. திறப்பு விழா தேதியை முன்னரே அறிவித்து விட்டதால், பணிகள் முழுமை பெறுவதற்குள், கடந்த மாதம் 25ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.டிச.1ம் தேதி முதல்(நேற்று) பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஏராளமானோர் குடும்பத்துடன் பூங்காவை பார்வையிட வந்தனர்.பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால், யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது போல் தினமும் பலர் வந்து, பார்த்து திரும்பி செல்கின்றனர்.நுழைவாயிலில் நிற்கும் காவலர்கள், 'இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் அல்லது ஆங்கிலப் புத்தாண்டன்று அனுமதிக்கப்படுவர்' என, ஆளுக்கொரு விதமாக பதிலளிக்கின்றனர்.நிலுவை பணிகள்
செயற்கை மலைக்குன்றுக்கு முன்பகுதியில், கிரானைட் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நுழைவாயிலில் திறக்கப்பட்ட கல்வெட்டு பகுதி மற்றும் கேட் அமைப்பதற்கான வேலை நடைபெற இருக்கிறது. கண்ணாடி மாளிகை உருவாக்கும் பணி முடிய பல நாட்களாகும் என தெரிகிறது.நிலுவை பணிகளை, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். இறுதிக்கட்ட பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க இலக்கிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் பாதுகாவலர்கள் கூறுவது போல், முழுமையாக பூங்காவை பார்க்க, 2026 வரை காத்திருக்க வேண்டும் போல்தான் தெரிகிறது.