| ADDED : டிச 02, 2025 07:36 AM
கோவை: சாய்பாபா காலனியில் உள்ள ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 29வது ஆண்டு ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியது. இதில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி, மஹரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளி, டாக்டர் தசரதன் பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி, ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளி உட்பட எட்டு அணிகள், 'நாக் அவுட்' முறையில் விளையாடுகின்றன. நேற்று துவங்கிய போட்டிகளை, பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவங்கி வைத்தார். கிரிக்கெட் கமிட்டியின் செயலாளர் சங்கர்கணேஷ், ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்துகின்றனர். இருபது ஓவர்கள் கொண்ட முதல் போட்டியில், ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி அணியும், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. செயின்ட் தாமஸ் பள்ளி அணி, 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 58 ரன் எடுத்தது. எதிரணி வீரர் சியாம் நிர்மல், 3.4 ஓவரில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் அணியினர், 5.1 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 62 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வீரர்கள் ஹர்சவர்தன், 30 ரன், ரித்விக், 16 ரன் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.