| ADDED : டிச 02, 2025 04:57 AM
சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழை காரணமாக, 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி பாதித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக, கடந்த 3 நாட்களாக கடலுார் மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு மழை பதிவானது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. சிதம்பரம் அடுத்துள்ள கணக்கரப்பட்டு, நற்கந்தங்குடி, குமாரமங்கலம், வசபுத்தூர், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், பிச்சாவரம், கீழப்பெரும்பை, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் நெல் பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நெற்பயிர்கள், வெளியில் தெரியாத அளவில் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் வடியாத நிலையல், தற்போது கடந்த 3 நாள் பெய்த மழையால் பயிர்கள் மேலும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீர், பிச்சாவரம் உப்பனாற்றில் வடியவேண்டும். ஆனால் அதில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.