| ADDED : அக் 05, 2011 11:55 PM
வத்தலக்குண்டு : ''ஊழல், லஞ்சம் இல்லாத, நியாயமான, வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும்,'' என வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கு தே.மு.தி.க.,சார்பில் போட்டியிடும் லதா ஜெர்மன்ராஜா கூறினார். அவர் கூறியதாவது: வத்தலக்குண்டு பேரூராட்சியில் இதுவரை இருந்தவர்கள் கடைபிடித்து வந்த ரகசிய நடவடிக்கைகள் நீக்கப்பட்டு வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும். பொதுமக்களின் தேவைகள் அனைத்தும் லஞ்சமின்றி நிறைவேற்றப்படும். இடையூறு இல்லா போக்குவரத்து கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புறவழிச்சாலை அமைவதில் உள்ள தடங்கல்கள் நீக்கப்பட்டு, விரைவில் புறவழிச்சாலை அமைய மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்ஸ்டாண்ட் மற்றும் அனைத்து வார்டுகளிலும் இலவச கழிப்பிட வசதி செய்து கொடுப்போம். நகரில் கழிவு நீர் தேங்காதவாறு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேரூராட்சிக்குட்பட்ட ஆடுசாபட்டிக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும். மின்மயானம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்வேன். வைகை அணையிலிருந்து நேரடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக நவீன பூங்கா அமைக்கப்படும். சிமென்ட் ரோடுகள் இல்லாத தெருக்களில் தரமான ரோடுகள் அமைக்கப்படும். பொதுப்பிரச்னைகள் நேரடியாக உடனுக்குடன் தீர்க்கப்படும். கட்சி, ஜாதி வேற்றுமையின்றி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தே.மு.தி.க., வின் தாரகமந்திரமான மக்கள் சுபிட்சத்துடன் வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிக்கு இணையான அனைத்து வசதிகளும் கொண்ட பஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார்.