நடைபாதைகள் ஆக்கிரமிப்பு: பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் பகல் முழுதும் மக்கள் கூட்டம் காணப்படும். பஸ் நிலையத்தை சுற்றிலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. கடைகள் வைத்திருப்பவர்கள் நடைபாதையை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கடைகரை விரிவுப்படுத்தி உள்ளனர். சில கடைக்காரர்கள் பயணிகள் அமரும் இருக்கைகளையும் சேர்த்து ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர். பஸ் நிலைய மைய பகுதி மற்றும் பஸ்கள் வெளியே குறுகிய பாதையிலும் ஆக்கிரமிப்பு செய்து பூ, காய்கறி, பழம், கடைகள் அமைத்து விற்பனை நடக்கிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலைய வளாகத்தில் நடந்து செல்ல முடியாதபடி, நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்து வியாபாரம் செய்வதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் கடை நடத்தும் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் விசுவாசிகள் என்பதால், நகராட்சி நிர்வாகம் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்வது கிடையாது. இருக்கையும் இல்லை, நிற்பதிற்கு இடமும் இல்லாததால், பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பஸ் நிலைய வளாகத்தில் வெயில் மழையில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. பஸ் நிலைய நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.