| ADDED : டிச 02, 2025 05:01 AM
வாலாஜாபாத்: பழையசீவரத்தில் மூன்று சாலை பிரியும் இடத்தில், விதிமுறையின்றி தாறுமாறாக வாகனங்கள் இயங்குவதால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம் உள்ளது. சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்கத்தின் போது, இங்குள்ள மலை பேருந்து நிறுத்தம் அருகே சாலை அகலப்படுத்த பாலாற்றையொட்டி புதியதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் நோக்கி வரும் வாகனங்கள் இந்த பாலத்தின் சாலையில் இயக்கப்படுகிறது. இப்பகுதியில், மலை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மிகவும் தாழ்வாக அமைந்துள்ளதால் செங்கல்பட்டில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் அங்குள்ள வளைவில் வாகனங் களை திருப்புவதில் திக்குமுக்காடுகின்றன. மேலும் இதே பகுதியில் பாலாற்று பாலம் வழியாக திருமுக்கூடல் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் ஒரு சாலையும், மற்றொரு புறத்தில் செங்கல்பட்டுக்கு செல்லும் சாலை என மூன்று சாலை அமைந்துள்ளது. இந்த மூன்று வழி பிரிவு சாலையில், விதிமுறைகளின்றி தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பாலாற்றங்கரையின் மறுபுறத்தில் இருந்து பழையசீவரம் சந்திப்பு சாலைக்கு வரும் வாகனங்கள், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வரும் வாகனத்தோடு விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, இந்த மூன்று வழிச் சாலை பகுதியில் விபத்து அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு வேகத்தடை அமைத்தல், பேரிகேட் ஏற்படுத்துதல் அல்லது சிக்னல் வசதி போன்ற விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.