| ADDED : நவ 14, 2025 01:33 AM
குளித்தலை, குளித்தலை பகுதியில், வாரிச்சு கண்ணாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, மலையப்பன் நகர் விவசாயிகள், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீயிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: குளித்தலை, தென்கரை பாசன வாய்க்கால் பெரியபாலம், நீர்வளத்துறை அலுவலகம் எதிரில் உள்ள கிளை பாசன வாரிச்சு கண்ணாற்றை பயன்படுத்தி, 400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கண்ணாறு செல்லும் பாதையில், 12 அடி அகலமுள்ள பாதையை 2 அடியாக குறைத்து, பல கட்டடங்கள், சிமென்ட் சாலைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகவும், சீமை கருவேல மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. விவசாயத்தை நம்பியுள்ள, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே முற்றிலும் இழந்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக, பலமுறை மனு அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடந்த மாதம் இது குறித்து, குளித்தலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தற்போதாவது, ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.