| ADDED : டிச 09, 2025 03:48 AM
கூடலுார்: நீலகிரியின் பூர்வ குடிகளான, ஆறு பழங்குடியின மக்களின் மொழிகளில், திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தமிழர்களின் தொன்மையான நுாலான திருக்குறளை, அனைத்து தரப்பு மக்களும் படித்து பயன் பெறும் வகையில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், ஏற்கனவே, 9 உலக மொழிகள் உட்பட 34 மொழிகளில், மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. தற்போது, மேலும், 30 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிடும் பணி நடந்து வருகிறது. அதில், நீலகிரியின் பூர்வ பழங்குடிகளான, தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இப்பணியில், கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் பேராசிரியர்கள் கரிகாலன், தண்ணரசி ஆகியோர், ஆறு பழங்குடி மக்களின் உதவியுடன் திருக்குறளை மொழி பெயர்த்து வருகின்றனர். இதேபோல மேலும், 11 பழங்குடியின மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நடந்து வருவதாக, பேராசிரியர் கரிகாலன் தெரிவித்தார்.