உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமநாதபுரம் அருகே 200 ஏக்கர் விளை நிலத்தில் கச்சா எண்ணெய், எரிவாயு குழாய் பதிக்க திட்டம் விவசாயிகள் எதிர்ப்பு

 ராமநாதபுரம் அருகே 200 ஏக்கர் விளை நிலத்தில் கச்சா எண்ணெய், எரிவாயு குழாய் பதிக்க திட்டம் விவசாயிகள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வழுதுார் அருகே வடகாடு கிராமத்தில் 200 ஏக்கரில் விளை நிலங்களில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை மூலம் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள விளை நிலங்கள் வழியாக இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினரால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக காரைக்கால் ஓ.என்.ஜி.சி., அதிகாரம் பெற்ற தனி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ைஹட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி கூறியதாவது: வாலாந்தரவை ஊராட்சி வழுதுார், வடகாடு கிராமங்களில் 200 ஏக்கர் விவசாய நிலங்களின் வழியாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு குழாய்கள் அமைக்க உள்ளதாக விவசாய நில உரிமையாளர்களுக்கு நவ.,4ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 21 நாட்களில் ஆட்சேபனை தெரிவிக்கவும் கூறியுள்ளனர். இந்த கிராமங்களில் மானாவாரியாக 100 ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. குழாய்கள் பதிப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட்டு நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதிக்க வேண்டும். விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளை திரட்டி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நவ.,17ல் கலெக்டரிடம் மனு அளித்து முறையிட உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ