மேட்டூர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், நங்கவள்ளி டவுன் பஞ்., கூலி தொழிலாளி தாண்டான் மனைவி மூதாட்டி ராஜம்மாள், 80. தாண்டான் இறந்து விட்டார். ராஜம்மாள் வசித்த வீடு தொடர்பாக சொத்து தகராறு ஏற்பட்டது. பிரச்னை தொடர்பாக சட்ட விதிகளை பின்பற்றாமல், சொத்தில் இருந்து ராஜம்மாளை அப்புறப்படுத்த கூடாது என கடந்த, 2011 செப்.,12ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் கடந்த, 2017 ஜூலை, 10ல் நங்கவள்ளி டவுன் பஞ்., செயல் அலுவலர் மேகநாதன், அலுவலக ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், போலீஸ் உதவியுடன் பொக்லைன் மூலம் ராஜம்மாள் சுவாதீனத்தில் உள்ள வீட்டின் பாதியை இடித்து சேதப்படுத்தி, உள்ளே இருந்த பீரோ, டிவி, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தி வாகனத்தில் எடுத்து சென்றனர்.நங்கவள்ளி செயல் அலுவலர் மேகநாதன் மீது, மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜம்மாள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கு கடந்த, 28ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி செல்வம் விசாரித்து, நங்கவள்ளி செயல் அலுவலர் மேகநாதனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.