குப்பையை பிரித்து கொடுத்தோருக்கு மஞ்சப்பை வழங்கல்
சேலம், சேலம், அம்மாபேட்டை, 34வது வார்டு, ராஜகணபதி தெருவில், 'எனது குப்பை எனது பொறுப்பு' தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தொடங்கி வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க திடக்கழிவுகளை முறையாக பிரித்து கையாள வேண்டும். மக்கள், பிரித்து கொடுக்கும் மட்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி குப்பையை முறையாக பிரித்து சேகரிப்பதன் மூலம் இக்கழிவை, மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி சுற்றுச்சூழலுக்கு மாசுபடாதபடி மறு உபயோகத்துக்கு பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து குப்பையை முறையாக பிரித்து கொடுத்த மக்களுக்கு, மஞ்சப்பை வழங்கி ஊக்கப்படுத்தினார். மண்டல குழு தலைவர் தனசேகர், செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.