| ADDED : டிச 03, 2025 03:43 AM
பெரியகுளம்: சபரிமலைக்கு சென்று விட்டு ஆந்திராவிற்கு காரில் திரும்பி சென்ற போது தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடுகபட்டி பைபாஸ் ரோடு பாலத்தில் மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் ஐயப்ப பக்தர்கள் நரேஷ்குரிலா 32. வேணு 55, பலியாயினர். ஆந்திரா மாநிலம் சக்திவேரூர் தடா மாவட்டம் வரகையாபாளையத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குரிலா. இவரது மகன் சாதுர்யா 9, நண்பர் வேணு. இவர்கள் நேற்று முன்தினம் டிச.,1ல் சபரிமலைக்கு காரில் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பினர். காரை அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் முனிதேஜா 28, ஓட்டினார். தேனி பைபாஸ் ரோட்டில் சென்ற கார் பெரியகுளம் அருகே வடுகபட்டி பைபாஸ் ரோடு பாலத்தில் மோதி, ஓட்டல் அருகே 15 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நரேஷ்குரிலா பலியானார். அந்தப்பகுதி வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. நரேஷ்குரிலா உடலை பார்த்து அவரது மகன் சாதுர்யா அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. காயமடைந்த சாதுர்யா உட்பட மூவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வழியிலேயே வேணு இறந்தார். சாதுர்யா, முனிதேஜா சிகிச்சையில் உள்ளனர். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார் விசாரணை செய்து வருகிறார். டிரைவர் முனிதேஜா தூங்க கலக்கத்தில் கார் ஓட்டியது தெரிய வந்தது.