| ADDED : நவ 13, 2025 12:22 AM
மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ள போதி அளவில் பணியாளர்கள் இல்லை. இதனால் திடக்கழிவு மேலாண்மையில் ஊராட்சிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. பல ஊராட்சி பகுதிகளில் உர மேலாண்மை கூடங்கள் காட்சி பொருளாக பயன்பாடின்றி உள்ளது. சில இடங்களில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பணியாளர்கள் கூடுதலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சிகளில் கூடுதலாக துாய்மை காவலர்கள் நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் 2.43 லட்சம் வீடுகள் உள்ளன. 150 வீடுகளுக்கு ஒரு துாய்மை காவலர் வீதம் நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. நகர்பகுதிக்கு அருகில் உள்ள ஊராட்சிகளான வடபுதுப்பட்டி, அரண்மனைப்புதுார், கீழவடகரை, 10ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ராயப்பன்பட்டி, எண்டபுளி, கடமலைக்குண்டு, ஊஞ்சாம்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் ஆகிய 9 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 132 துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற ஊராட்சிகளில் துாய்மை காவலர்கள் நியமிக்க வீடுகள் கணக்கெடுத்து வருகிறோம். வீடுகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் கூடுதல் துாய்மை காவலர்கள் நியமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது என்றனர். ஊராட்சி துாய்மை காவலர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான சம்பள தொகையை ஊராட்சி நிர்வாகம் மகளிர் திட்டத்திற்கு அனுப்பி பின் அங்கிருந்து துாய்மை காவலர்களுக்கு மாதம் ரூ. 5ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், ஊராட்சிகளில் இருந்து நேரடியாக வங்கி கணக்கிற்கு தாமதமின்றி சம்பளம் வழங்க நடவடிக்கை வேண்டும் துாய்மை காவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.