| ADDED : டிச 02, 2025 04:22 AM
கண்ணுார்: கண்ணுார் பகுதியில் மாட்டுச் சாணமாக மாறிய சாலையால், குடியிருப்பு மக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கண்ணுார் ஊராட்சி. இந்த ஊராட்சியிலிருந்து கல்லம்பேடு செல்லும் இணைப்பு சாலை, தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், 2022-23ன் கீழ், 67.48 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது இல்லை. அவை சாலையிலேயே சுற்றி திரிகின்றன. இதனால், சீரமைக்கப்பட்ட சாலை உட்பட பல பகுதிகளில் மாட்டுச் சாணம் பரவிக் கிடக்கின்றன. தற்போது, மழை பெய்து வருவதால், மாட்டுச்சாணம் மழை நீரில் கலந்து சாலை சேறு போல் மாறியுள்ளது. இதனால், பகுதிமக்கள் மற்றும் குழந்தைகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், சாணத்தை அகற்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.