| ADDED : மே 27, 2024 11:56 PM
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் ராஜி, 47, என்பவர் நிலத்தில், நான்கு நாட்களுக்கு முன் வானிலிருந்து ஒரு மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து விழுந்தது. அதில், அங்கு 5 அடி ஆழ பள்ளம் உருவானது. சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, எந்த பொருளும் இல்லை. ஆனால், பள்ளம் மட்டும் தோன்றியிருந்தது. மேலும், அந்த இடத்தை சுற்றி, கடும் வெப்பம் வீசியதால், அதிர்ச்சியடைந்தனர்.அந்த இடத்தை, கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று பார்வையிட்டு, வி.ஏ.ஓ., முனியப்பனிடம் அந்த பள்ளத்தை சுற்றி வேலி அமைத்து, பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார்.பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: விழுந்தது என்ன பொருள், எதனால் பள்ளம் ஏற்பட்டது என தெரியவில்லை. ஆய்வு நடத்தி உண்மை தன்மை அறிய, சென்னை அறிவியல் மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் வந்து ஆய்வு செய்து கூறியபின், என்னவென்று தெரியவரும். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.