| ADDED : டிச 02, 2025 07:04 AM
திடக்கழிவு மேலாண்மையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி கூறியதாவது: மாநகராட்சியில் தினமும் சராசரியாக, 800 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரமாகின்றன. இவற்றை முறையாக கையாளும் வகையில் பல்வேறு நடைமுறைகள் நேற்று முதல் முழுமையாகவும், கட்டாயமாகவும் செயல்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நேற்று மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும், வார்டு வாரியாக துாய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளின்படி குப்பைகளை தரம் பிரித்து பெறுவது குறித்தும், மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றின் வகைகள், அவற்றைப் பெறும் வழி மற்றும் நாட்கள் குறித்தும் விளக்கப்பட்டது. குப்பை தரம் பிரிப்பு மையங்களில் உள்ள பணியாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. முறையாகவும் கவனமாகவும் பணியாற்ற வேண்டும். என்ன வகையான கழிவுகளை எந்த வகையில் பிரித்து கையாள்வது என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் தலா, 100 டன் என்ற வகையில் தினமும் தொழிற்சாலை கழிவுகளை சேகரிக்கும் வகையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 3 மாதத்துக்குள் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப தங்கள் பணியை, மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.