திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில், திருப்பூர், காந்தி நகர், ஆஷர் நகர், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர். மாணவர்களின் சிந்தனையாற்றல் வேகப்படுத்தி, பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மொழிப்பாடங்கள் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களின் மீதும் மாணவ, மாணவியருக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர்களை ஊக்குவிக்க, இப்போட்டி நடக்கிறது. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதி போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. திருப்பூர், காந்தி நகர், ஆஷர் நகர், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், 260 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் நிசாந்த், மீனாட்சி சுந்தரம் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்; இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வர் சித்ராதேவி, நிர்வாகக்குழு உறுப்பினர் காயத்ரி விவேகானந்தன், முதல்வர் புஷ்பலதா, 'பட்டம்' ஒருங்கிணைப்பாளர் பாலாமணி ஆகியோர் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள், கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.