திருப்பூர்: நுால் விலை நிலையாக இருப்பதால், உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, பஞ்சு விலை நிலையாக இருப்பதால், நுால் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பின்னலாடை உற்பத்தியாளர்கள், தேவையான அளவு நுால் கொள்முதல் செய்து, கோடைக்கால உற்பத்தியை துவக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்றுமதி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கினாலும், அமெரிக்க வரி உயர்வு காரணமாக, அந்நாட்டுக்கான ஏற்றுமதியாளர்கள் மட்டும் ஆர்டர்களை ஏற்காமல் காத்திருக்கின்றனர். திருப்பூரின் வழக்கமான உற்பத்தியில், 15 சதவீதம் வரை குறையவும் வாய்ப்புள்ளது. பஞ்சு விலை நிலையாக இருப்பதால், ஒசைரி நுால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. ஒசைரி நுால் (செமி கோம்டு): 16ம் நம்பர் - கிலோ 234 ரூபாய், 18ம் நம்பர் - 236 ரூபாய், 20ம் நம்பர் - 238 ரூபாய், 25ம் நம்பர்-247, 30ம் நம்பர் - 259 ரூபாய்க்குவிற்கப்படுகிறது. 'கோம்டு' ரக நுால், 16ம் நம்பர் - 245 ரூபாய், 18 ம் நம்பர் - 247 ரூபாய், 20ம் நம்பர் -249 ரூபாய், 25 ம் நம்பர் - 258 ரூபாய், 28 ம் நம்பர் - 269 ரூபாய், 30ம் நம்பர் -270 ரூபாய்க்கு விற்கப்படுவதாக, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. உற்பத்தி வேகமெடுக்குமா?
திருப்பூரில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான நூல் வியாபாரம் சீராக நடந்து வருகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையும் நிலையாக இருக்கிறது. ஜவுளி உற்பத்தி வேகமெடுக்காததால், நூற்பாலைகள், கூடுதல் விலை சலுகையுடன் விற்பனை செய்து வருகின்றன. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் போது, நூல் வியாபாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. - முருகேசன், தலைவர், திருப்பூர் ஒசைரி நூல் வியாபாரிகள் சங்கம்