உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மழையால் தக்காளி சாகுபடி பாதிப்பு; வரத்து சரிவால் உயரும் விலை

 மழையால் தக்காளி சாகுபடி பாதிப்பு; வரத்து சரிவால் உயரும் விலை

உடுமலை: பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், தக்காளி சாகுபடி பாதித்துள்ளது. இதனால் சந்தைக்கு இதன் வரத்து சரிந்து, விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக, செடி மற்றும் காய்கள் பாதிக்கப்படும் என்பதால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும், மழைக்கு ஓரளவு பாதிக்காத வகையில், அதிக சாகுபடி செலவு பிடிக்கும் கொடி முறையில் குறைந்தளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ள நிலையில், தொடர் மழையால், தக்காளி செடிகள் மற்றும் பழங்கள் பாதித்துள்ளன. இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது . கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து, தக்காளி கொள்முதல் செய்து வருவதால், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாபாரிகள் கூறியதாவது : பருவ மழை காரணமாக, தக்காளி நடவு குறைந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் கொடி முறையில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் தற்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வழக்கமாக உடுமலை சந்தைக்கு, 50 முதல், 70 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து இருந்தது, தற்போது, 5 முதல், 10 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளது. பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து இல்லாததாலும், உடுமலை சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளதாலும், தக்காளி விலை உயர்ந்துவருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி