ரூ.3 கோடி கஞ்சா கடத்தல் மாணவர் உட்பட 2 பேர் கைது
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கல்லுாரி மாணவன் உட்பட இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணி, தன் உடைமைக்குள், 3 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தியது தெரிந்து, அதை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 3 கோடி ரூபாய். இதை கடத்தி வந்த ஆனந்த் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில், கஞ்சாவை வாங்க, விமான நிலைய வாசல் பகுதியில் ஒருவர் வந்திருப்பதாக அவர் கூறியதையடுத்து, கஞ்சாவை வாங்க வந்த, திருவள்ளூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் சீனிவாசன், 20, என்பவரிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.