| ADDED : டிச 02, 2025 07:36 AM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஓட்டலில் தவற விட்ட 17 சவரன் நகைகள் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டது. சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பிரசாந்த், 30; இவரது மனைவி நளினி, 28; ஐ.டி., ஊழியர்களான இவர்கள், நேற்று காலை திருவண்ணாமலையில் நடந்த உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்றனர். பின், காரில் தாம்பரம் செல்லும் வழியில், திண்டிவனம் - சென்னை சாலையில் சலாவதி கூட்ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கிருந்து 8:30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் சென்றனர். வீட்டிற்கு சென்று பார்த்தபோது நளினியின் 17 சவரன் நகை வைத்திருந்த கைப்பை காணாமல் போனது தெரியவந்தது. அந்த கைப்பையை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு வந்ததாக நளினி தனது கணவரிடம் தெரிவித்தார். உடன், பிரசாந்த் தனக்கு தெரிந்த போலீஸ்காரர் வாயிலாக திண்டிவனம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவாசகத்திற்கு தெரிவித்தார். ரோந்து போலீசார் சலவாதி கூட்ரோட்டில் உள்ள அந்த ஓட்டலில் பார்த்த போது, நளினியின் கைப்பை அங்கேயே கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அந்த கைப்பையை எடுத்து சோதனை செய்த போது, அதில் 17 சவரன் நகைகள் இருந்தது தெரியவந்தது. பிரசாந்த், நளினியை ரோஷணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி முன்னிலையில் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.