விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சேதமடைந்த அலுவலகங்கள் மற்றும் அடிப்படை வசதியின்றி பணிபுரிய முடியாமல் வி.ஏ.ஓ.,க்கள் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சிகள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு வருவாய் துறை திட்டங்களை சென்று சேர்க்க, 569 வி.ஏ.ஓ., பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், தற்போது 555 வி.ஏ.ஓ.,க்கள் பணியில் உள்ளனர். பணியில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதன் மூலம் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அரசு சலுகைகள் பொதுமக்களுக்கு சென்றடைவதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் பகுதியில் பிறப்பு, இறப்பு பதிவு, முதல் பட்டதாரி சான்று, இருப்பிடம், வருமானம், ஜாதி, பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்று வழங்குகின்றனர். இதேபோன்று, கிராமம் மற்றும் நகரங்களில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள் குறித்தும் வருவாய் துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து அரசு சலுகைகளுக்கும் வி. ஏ.ஓ., சான்று முக்கியமாக உள் ளது. இதேபோன்று, கிராமங்களில் உள்ள விவசாய நி லங்களில், விளையும் விளைபொருட்களின் உற்பத்தி அளவு குறித்த அறிக்கையை, வி. ஏ.ஓ.,க்கள் அரசிற் கு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் கிராமங்களில் பணியாற்றும் வகையில், அலுவலக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள், மாவட்டத்தின் 300க் கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சேதமடைந்துள்ளன. கட்டடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்தும், தரைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. சில நேரங்களில் அலுவலகங்களில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும்போது சிமென்ட் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. குறிப்பாக, விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் சில தினங்களுக்கு முன் வி.ஏ.ஓ., பணியில் இருந்த போது மேற்கூரை பெயர்ந்து அவரது தலையில் விழுந்துள்ளது. இதனால், அச்சமடைந்த வி.ஏ.ஓ., அந்த அலுவலகத்தை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிவிட்டார். இதேபோன்று, வி.ஏ. ஓ.,க்கள் தங்கள் அலுவலக கட்டடம் சரியில்லாததால் மாற்று இடத்தில் அலு வலகம் அமைத்து பணிபுரிவதால் பொதுமக்கள் அலைச்சலுக்குள்ளாகின்றனர். இருப்பினும் ஒரு சில சேதமடைந்த அலுவலகங்களில் வி.ஏ.ஓ.,க்கள், அச்சத்துடன் பணிபுரிகின்றனர். கட்டடம்தான் மோசமான நிலையில் இருக்கிறது என்றால், அந்த கட்டடத்திற்கு மின்சாரம், குடிநீர், இருக்கை வசதிகள் மற்றும் கோப்புகளை பாதுகாத்து வைக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் பல்வேறு கிராமங்களில் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், வி.ஏ.ஓ.,க்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாவட்டத்தில் சேதமடைந்த அலுவலகங்களை புனரமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.