உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / என்ன ஆனது விருதுநகர் நகராட்சி விரிவாக்கம்; மாவட்ட தலைநகருக்கு தகுதியற்றதாய் வளர்ச்சி

என்ன ஆனது விருதுநகர் நகராட்சி விரிவாக்கம்; மாவட்ட தலைநகருக்கு தகுதியற்றதாய் வளர்ச்சி

விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக விருதுநகர் உள்ளது. விருதுநகர் நகராட்சியின் மொத்த பரப்பளவு 6.60 சதுர கிலோ மீட்டர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 73003 மக்கள் தொகை. 36 வார்டுகள் உள்ளன. தேர்வு நிலை நகராட்சியான விருதுநகர் நகராட்சியில் தற்போது 90ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.இது நுாற்றாண்டு கண்ட நகராட்சி. 1915 மார்ச் 13ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு, பின் 1956ல் முதல் நிலையாகவும், 1998ல் தேர்வு நிலை நகராட்சியாக உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு வருவாய் ரூ.9 முதல் 10 கோடி வரை ஈட்டப்படுகிறது. நகர் விரிவாக்கம் அவசியம் என பல தரப்புகளில் இருந்து கோரிக்கை வந்தது. 2023ல் இருந்தே விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் இணைக்க பணிகள் நடந்து வந்தன. 2024 டிச. ல் கூரைக்குண்டு ஊராட்சியின் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, கலெக்டர் அலுவலகம் உள்ள குமாரசாமிராஜா நகர், ரோசல்பட்டி ஊாரட்சியில் ரோசல்பட்டி, குமராபுரம், ரெங்கநாதபுரம், சிவஞானபுரம் ஊாரட்சியில் சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, லட்சுமி நகர், பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர், கலைஞர் நகர், பராசக்தி நகர், முத்துராமலிங்க நகர் பகுதிகளையும் இணைக்க உத்தேசித்து ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது ஓராண்டாகி விட்ட நிலையில் பரிந்துரை மீது எந்த முன்னேற்றமும் இல்லை. விருதுநகர் நகராட்சி மாவட்ட தலைநகரின் நகராட்சியாக உள்ள போதிலும் பல்வேறு அடிப்படை வசதி குளறுபடிகள் உள்ளன. ரோடுகள் வசதிகள் மக்களின் முதுகெலும்பை பதம் பார்க்கும் கிடங்குகளாக மாறி விட்டன. விருதுநகர் நகராட்சியின் ஊழியர்கள் சம்பளம் மட்டும் மாதத்திற்கு ரூ.1 கோடியை தாண்டுகிறது. இதனால் மாநில நிதிக்குழுவின் பணம் போதுமானதாக இருப்பதில்லை. இதே விருதுநகர் நகராட்சியை விரிவாக்கம் செய்தால் நகராட்சியின் தரம் உயர்ந்து கூடுதல் நிதி கிடைக்கும். நகர்ப்பகுதியை விரிவுப்படுத்தம் போது வருவாய் அதிகரிப்பதுடன், மாநில நிதிக்குழு அதிகரித்து அதிகப்படியான வசதிகளை செய்து தர முடியும். மாவட்ட தலைநகராக உள்ள காமராஜர் பிறந்த மண்ணுக்கு இந்த அங்கீகாரத்தை கூட மாநில உள்ளாட்சிகள் துறை அமைச்சகம் தராமல் இருப்பது வேதனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ