நடிகர் விஷால் வழக்கில் இருந்து ஐகோர்ட் நீதிபதி திடீர் விலகல்
சென்னை: லைக்கா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய, 21 கோடி ரூபாய் கடனை, 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகியதுடன், மாற்று அமர்வில் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சினிமா பைனான்சியர் அன்பு செழியனின், 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம், 21.29 கோடி ரூபா ய் கடன் பெற்றிருந்தது. இத்தொகையை லைக்கா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, அனைத்து படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதால், கடனுக்காக செலுத்திய தொகையை திருப்பித் தர, விஷாலுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், லைக்கா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய, 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் வழங்க, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்து உள்ளதாகவும், சில கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கை மாற்று அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.