உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வழக்குகளில் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

பாலியல் வழக்குகளில் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை : பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான, பாலியல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது குறித்த பரிந்துரைகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.,சுந்தரேசன், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி, 'உயர் நீதிமன்ற பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க, அவகாசம் வழங்க வேண்டும்' என, என கோரிக்கை விடுத்தனர்.டி.ஜி.பி., தரப்பில், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணியிடங்களில் நடந்த பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளில், விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். 'பாலியல் தொடர்பாக, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பாலியல் புகாரை பெண்கள் தைரியமாக கொடுக்கின்றனர். மாநில போலீசாரும், அந்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,'' என்றார்.அதை கேட்ட நீதிபதி, 'தற்போது கூட பாலியல் புகாரில் சிக்கிய, டி.ஐ.ஜி., அந்தஸ்து அதிகாரி மீது, அரசு உடனே நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து பத்திரிகையில் படித்தேன்' என்றார். அடுத்து அசன் முகமது ஜின்னா கூறுகையில்,''ஏற்கனவே டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த அதிகாரி மீதான பாலியல் புகாரை, முறையாக புலன் விசாரணை செய்து, அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையை போலீசார் பெற்றுத் தந்தனர். உயர் அதிகாரிகள் மீதான புகார் என்றாலும் நியாயம் கிடைக்கும் என, பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை, தமிழக போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்,'' என்றார்.உடன் நீதிபதி, 'அண்ணா பல்கலை பாலியல் குற்றச்சாட்டில், போலீசார் எடுத்த விரைவான நடவடிக்கைகளும், டி.ஐ.ஜி., என பாராமல் அவரை சஸ்பெண்ட் செய்து, அரசு எடுத்த நடவடிக்கையும் பாராட்டுக்குரியது' என்றார்.பின், 'மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால், பெண்கள் அச்சமின்றி தைரியமாக, வேலைக்கு செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். 'வேலை செய்யும் இடங்களில் அமைத்திருக்கும், 'விசாகா' கமிட்டியின் விபரங்களையும், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 3க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை