| ADDED : டிச 07, 2025 02:18 AM
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில், பிளஸ் ௨ படித்து வந்த கவியரசன் என்ற மாணவர், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 15 பேர் சேர்ந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரலில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவரை, இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டினார். மாணவர்களின் கவனம் தவறான பாதைகளில் சிதறுவதே இதற்கு காரணம். அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக மாறி வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையும் காரணம். மாணவர்களின் கவனச் சிதறல்களை தடுக்க, பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும். வாரம் இரு முறை நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.