| ADDED : டிச 02, 2025 04:04 PM
கொழும்பு: வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு பாகிஸ்தான் நிவாரண பொருட்களை அனுப்பிய நிலையில் அது காலாவதியானது என தெரியவந்துள்ளது. இதனை வைத்து பாகிஸ்தானை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையை கபளீகரம் செய்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் மட்டும் 369 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.இலங்கையில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நம் நாட்டின் சார்பில் நிவாரணப் பொருட்கையும், மீட்புப் படையினரையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இலங்கைக்கு உதவ நினைத்து பாகிஸ்தானும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது.இது தொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து நிவாரண பொருட்கள், இலங்கையில் தவிக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. இலங்கைக்கு பாகிஸ்தான் என்றும் துணை நிற்கும். எனக் கூறியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரண பொருட்களின் புகைப்படத்தையும் சேர்த்து இருந்தது.நிவாரண பொருட்களில், அது காலாவதி தேதி 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பி அவர்களை பாகிஸ்தான் அவமானப்படுத்தி விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.