
அன்னதானம் செய்ய சிறந்த தலமாக கேரளா, வைக்கம் மகாதேவர் கோயில் விளங்குகிறது.
தல வரலாறு: கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 லிங்கங்களைக் கொடுத்து பூஜை செய்ய கூறினார். வலக்கையில் ஒரு லிங்கமும், இடக்கையில் ஒரு லிங்கமும், வாயில் ஒரு லிங்கமுமாக அவன் எடுத்து சென்றான். செல்லும் வழியில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், சிவனை நோக்கி தவம் இருந்தார். கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,''வேண்டும் வரம் கேளும்,''என்றார். அதற்கு வியாக்ரபாதர், ''இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்''என வேண்டினார். (இதுவே வைக்கத்தஷ்டமி விழாவாக கொண்டாடப்படுகிறது) இதன் பின் கரன், வலக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடம் தான் 'வைக்கம்' என அழைக்கப்படுகிறது. இடக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை ஏற்றமானூரிலும், வாயில் கடித்து கொண்டு வந்த மூன்றாவது லிங்கத்தை கடித்துருத்தியிலும் பிரதிஷ்டை செய் தான் கரன்.
தல சிறப்பு: கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காணலாம். இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார்.
வைக்கத்தஷ்டமி: முருகப்பெருமான் சூரபத்மனுடனும், தாரகாசூரனுடனும் போருக்குச் சென்றார். அவர் வெற்றி பெறுவதற்காக வைக்கத்தஷ்டமி அன்று சிவனே இங்கு அன்னதானம் செய்ததாக தலபுராணம் கூறுகிறது. இதனால், வைக்கத்தஷ்டமியன்று பக்தர்கள் ஏராளமாக அன்னதானம் செய்கின்றனர். இதில், சிவனும் பார்வதியும் கலந்து கொள்வதாக ஐதீகம். அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் கோயில் நிர்வாகத்திடம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
கோயில் அமைப்பு: மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர லிங்கம் அமைந்துள்ளது. அம்மனுக்கு சன்னதி கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
வனதுர்க்கை சந்நிதி: கோயிலின் தெற்கு பகுதியில் வன துர்க்கை அருள்பாலிக்கிறாள். இந்த சந்நிதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்தபோது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வக்கன்னி அரக்கியாக மாறி தொல்லை தருவது தெரிய வந்தது. அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்ட, அவர் திரிசூலியாகிய துர்க்கையை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார். அதன்படி செய்ததில் உடல்பகுதி விழுந்த இடத்தில் தான் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அரக்கியின் தலைமுத்தோடத்துகாவிலும், கால் குடிச்சேலிலும் விழுந்துள்ளது. திரிசூலியை அனுப்பிய கணபதி, பலிபீடம் அருகே இருக்கிறார்.
திருவிழா: கார்த்திகையில் வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள், மாசி அஷ்டமி, சிவராத்திரி. கோயிலில் அம்மன் இல்லை என்றாலும், 12 வருடத்திற்கு ஒருமுறை 12 நாள் தேவி வழிபாடு செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்: காலை 4- பகல் 12 மணி, மாலை 5- இரவு 8.30 மணி.
இருப்பிடம்: எர்ணாகுளத்திலிருந்து 34 கி.மீ., கோட்டயத்திலிருந்து 42 கி.மீ. பஸ்கள் உள்ளன.
போன்: 04829 225 812.

