/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
விளம்பரத்துக்கு விலைபோனதில்லை 'தினமலர்'
/
விளம்பரத்துக்கு விலைபோனதில்லை 'தினமலர்'
PUBLISHED ON : டிச 07, 2025 12:24 AM

தமிழகத்தில் பிறந்திருந்தாலும், டில்லிவாசியாக மாறிப் போனேன். இருந்தாலும், தமிழகத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் எனக்கு எப்போதும் அளப்பறிய பற்றுதலும் அன்பும் உண்டு. என்னுடைய பேச்சு, ஆங்கிலம் கலந்து இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். ஆங்கில மொழி மீது மட்டுமல்ல; எந்த மொழியையும் வெறுப்பவன் அல்ல நான். வளர்ந்த சூழல் அப்படி இருந்ததால், ஆங்கிலம் என்னுடைய பழக்க வழங்கங்களிலும் ஊறிப்போய் விட்டது.
அதை கடந்து தமிழ் மொழிக்கு காலம் முழுக்க தொண்டாற்ற வேண்டும் என்ற, சிந்தனை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில், தமிழ் மக்களை நேசித்து, அவர்களுடைய பிரச்னைகளை வெளிக் கொணர்ந்து அதற்கு தீர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு நாளிதழ் வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம்.
அந்த விருப்பத்தை அச்சு பிசகாமல் செய்து வருகிறது 'தினமலர்' நாளிதழ்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் அனைத்துமே எனக்கு பிடித்தமானவைதான். ஆனாலும், சமூகத்தின் பால் அக்கறை கொண்டு, அனைத்து செய்திகளையும் வெளியிடும் பத்திரிகையாக துவக்க காலம் முதல் 74 ஆண்டுகளை கடந்த பின்பும், ஒரு பத்திரிகை செயல்படுகிறது என்றால், அதன் உண்மையான சமூக அக்கறை பாராட்டுக்குரியது.
நாட்டில் பயங்கரவாத செயல்கள் நிறைய நடக்கின்றன. பயங்கரவாதிகள் பல ரூபங்களில் நாட்டில் ஊடுருவி, இந்தியாவை சிதைக்கும் எண்ணத்தோடு உலாவிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மத்திய அரசு ஏஜென்சிகள் தேடித் தேடி பிடித்து சிறைபடுத்துகின்றன.
அவர்கள் சிறைபடுத்தப்படும்போதெல்லாம் இடதுசாரி சிந்தனை கொண்டர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதும்; எழுதுவதுமாக உள்ளனர். அதை பல பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக பிரசுரித்து, தங்களுடைய எண்ணத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேசிய கண்ணோட்டத்திலும், தேச நலனிலுமே அக்கறை கொண்டு செயல்படும் 'தினமலர்', ஒரு நாளும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செய்தி போட்டதில்லை. தேசிய சிந்தனையோடு காலம் காலமாக செயல்படும் எங்களைப் போன்றொருக்கு, இது நிம்மதியை தருகிறது.
தேசிய அளவிலான பிரச்னைகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறேன். தினமலரில் இருக்கும் என்னுடைய நட்புக்கும் அன்புக்கும் உரியோர் என்னை தொடர்புகொண்டு பேசுவர். முக்கியமான பிரச்னைகளில் என்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை கேட்டு, அதை மெருகூட்டி வாசகர்களுக்கு பல முறை செய்திகளாக படைத்திருக்கின்றனர்.
முக்கிய தேசிய பிரச்னைகள் மீது கவனம் செலுத்தும் தினமலரின் பாங்கு தனித்துவமானது.
அதே போல், தமிழக அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் ஊழல்வாதிகளாக இருப்பது குறித்து, நான் ஆதாரங்களை திரட்டுவதுண்டு. அதை எப்படியோ தெரிந்துகொள்ளும் தினமலரில் இருப்போர், உடனே என்னை தொடர்பு கொண்டு, பேசி, பல முறை அதிரடியான செய்திகளை வெளியிட்டு, அரசாங்கத்தையும் அலற விட்டுள்ளனர்.
வெற்று பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாமல், ஊழலுக்கு எதிராக செயல்படுவோருக்கு துணையாக இருந்து, அவர்களை ஊக்குவிக்கிறது 'தினமலர்'.
தினமலரில் அனைத்து தரப்பு மக்களும் படித்து பயன் பெறும் அளவுக்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அதில் வெளியிடப்படும் அரசியல் செய்திகள் அனைத்தும் வித்தியாசமானவை. அரசியல் அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும், கள அரசியலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அன்றாடம் 'தினமலர்' படித்தால் போதும்.
உலகம், தொழில், லாபம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் வெளியாகும் 'தினமலர்' நாளிதழின் மொத்த பக்கங்களும் அறிவுக் களஞ்சியம். யு.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளுக்கு தயாராவோர், 'தினமலர்' நாளிதழை தவறாமல் படிப்பது, நல்ல முடிவுகளை பெற்றுக் கொடுக்கும்.
அரசுக்கு ஜால்ரா போட்டால், அரசு விளம்பரம் கிடைக்கும் என்று, தினமலர் நிர்வாகத்தை, பலர் பலமுறை அணுகிய போதும், 'இது மக்களுக்கான நாளிதழ். இதில் ஜால்ரா சத்தத்துக்கு இடமில்லை. தினமலர் விளம்பரத்துக்கு விலை போகாது' என்று, துணிச்சலோடு, அதிகாரவர்க்கத்தில் இருப்போரை விமர்சிக்கும் நாளிதழாக மின்னும் 'தினமலர்', இன்றைய 75 ஆண்டுகளை போல பல 75 ஆண்டுகளை எதிர்காலத்தில் கடக்கும்.
தொடர்ந்து தரம் குறையாமல் செய்திகளை வெளியிடும் என்பதில் எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. இந்த நல்ல நேரத்தில், 'தினமலர்' நிர்வாகத்தினர், ஊழியர்கள், வாசகர்கள் உள்ளிட்ட தமிழ் பெருங்குடி மக்களை வாழ்த்த கடமைப்பட்டு இருக்கிறேன்.
சுப்பிரமணியன் சுவாமி
மூத்த தலைவர், பா.ஜ., மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்

