சிதம்பரம் : சிதம்பரம் பா.ஜ., நகர பொதுச்செயலர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52), சிதம்பரம் நகர பா.ஜ., பொதுச் செயலர். கடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் சிதம்பரம் 17வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.புதுச்சேரியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மற்றும் தனது இரு மகன்களை பிரிந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் வந்து தங்கினார். அனந்தீஸ்வரன் கோவில் அக்ரஹாரம் மின்வாரியம் இறக்கத்தில் வசித்து வந்தவர், சவுண்ட் சர்வீஸ் கடை வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது நண்பர்களான ரமேஷ், மணி இருவரும் வெங்கடேசன் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள், வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அங்கு, ஹாலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், கடலுார் எஸ்.பி., ராதிகா சம்பவ இடத்திற்கு சென்று விசாணை நடத்தினார்.
மேலும், டவுன் இன்ஸ்பெக்டர் லாமேக், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப் பதிந்து, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.