தஞ்சாவூர்: ''கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது,'' என்று, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது;கமல்ஹாசன், 'ஹிந்து தான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என, கூறியதில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. கமல்ஹாசன் திட்டமிட்டு பேசியுள்ளார். அவர், ஹிந்து என்பதை நான் ஏற்க முடியாது. அவரது சகோதரர் சந்திரஹாசன், 2017ல் லண்டனில் உயிரிழந்த போது, கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். கமலஹாசனின் சகோதரி மகன், பாஸ்டருக்கு படித்துக் கொண்டு இருக்கிறார். மக்கள் நீதி மையம் கட்சிக்கு பின்னால், கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன. கமல்ஹாசன் ஒரு பேட்டியில், 'நான் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகிறேன்' என, கூறியுள்ளார். அவர், எப்படி தன்னை ஹிந்து என கூற முடியும். கமல் குடும்பமே, கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது. ஒரு திரைப் படத்தில், ஹிந்து எதிர்ப்பு உணர்வை, விபூதியை அழிப்பதன் மூலம் காட்டியிருப்பார். எனவே, ஹிந்துக்கள் இதை புரிந்து, கமலை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.