திண்டிவனம் : திண்டிவனம் அருகே, குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர், துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை, கொடியம்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 70. இவரது முதல் மனைவி தனம்மாளுக்கு, மனோன்மணி என்ற மகள், மணிகண்டன் என்ற மகன் உள்ளனர்.30 ஆண்டுகளுக்கு முன்பு தனம்மாள் இறந்துவிட்ட பிறகு, சுப்ரமணி, வண்ணமயில், 45; என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு, ராஜாமணி, 26; மணிமேகலை, 23; என்ற மகள்கள் உள்ளனர்.சுப்ரமணி, நான்கு ஆண்டுகளுக்கு முன், தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை, முதல் மனைவி மகன் மணிகண்டன் பெயரில் எழுதி வைத்துள்ளார். கடந்த வாரம், தனது வீட்டில் இருந்த ஆடுகளை விற்று, முதல் மனைவியின் மகள் மனோன்மணிக்கு கொடுத்துள்ளார்.இது தொடர்பாக நேற்று மாலை 5:30 மணியளவில், சுப்ரமணிக்கும், வண்ணமயிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுப்ரமணி, வண்ணமயிலின், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கத்தியால் வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பின்னர், வீட்டின் தோட்டத்தில் துாக்கு போட்டு சுப்ரமணி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சுப்ரமணியை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வண்ணமயிலின் உடலை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.