கரூர்: ஆயுத பூஜையையொட்டி, கரூரில் பூக்கள், பொரி, வாழைத்தார், பழங்கள் விற்பனை சூடுபிடித்தது. பூ மார்க்கெட், உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை இன்றும், சரஸ்வதி பூஜை நாளையும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கரூர் அருகே பசுபதிபாளையம், சீனிவாசபுரம், கருப்பாயி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், பொரி தயாரிப்பு கடந்த, ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்தது. ஒரு மூட்டை பொரி, 650 முதல், 700 ரூபாய்; நிலக்கடலை கிலோ, 120 முதல், 140 ரூபாய்; பொட்டுக்கடலை, 100 முதல், 110 ரூபாய்; ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி சராசரியாக, கிலோ, 80 முதல், 120 ரூபாய்; பூவன் வாழைத்தார், 500 முதல், 600 ரூபாய்; செவ்வாழை தார், 400 முதல், 500 ரூபாய்; ரஸ்தாளி, 500 முதல், 600 ரூபாய்; பெரிய வாழை மரம் ஜோடி, 500 முதல், 800 ரூபாய்; சிறிய வாழை மரம், 50 ரூபாய் வரை விற்றது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், மல்லிகை கிலோ, 800 முதல், 1,000 ரூபாய்; முல்லை பூ, 600 முதல், 800 ரூபாய்; அரளி, 400 முதல், 450 ரூபாய்; செண்டு மல்லி, 80 ரூபாய்; மரிக்கொழுந்து, நான்கு கட்டு, 120 ரூபாய்க்கும் விற்றது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.