ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, பேயனாற்றில் குளிக்க சென்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம், கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி, 21; கோபிசங்கர், 21; முத்துஈஸ்வரன், 25, சத்யபிரகாஷ், சசிகுமார் ஆகியோர், செண்பகத்தோப்பு பேயனாற்றில் குளிக்கச் சென்றனர்.முதலில் ஆற்றில் இறங்கிய பால்பாண்டி, தண்ணீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்தார்.
கோபிசங்கர், முத்துஈஸ்வரன், சத்யபிரகாஷ், தண்ணீருக்குள் குதித்து காப்பாற்ற முயன்றனர். அப்போது, பால்பாண்டி, கோபிசங்கர், முத்துஈஸ்வரன் ஆகியோரை தண்ணீர் அடித்து சென்றது. டவலை பயன்படுத்தி, சத்யபிரகாஷை, சசிகுமார் மீட்டார். மாயமான மூவரையும் மம்சாபுரம் போலீசார், ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், நேற்று காலை, மூவர் உடல்களும் மீட்கப்பட்டன.