ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சிபகுதியில் பாதாள சாக்கடை நீர் தேங்கிய பகுதிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்டன் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், பாதாள சாக்கடை கழிவு குடியிருப்புகளுக்குள் புகுந்தது. காட்டு பிள்ளையார் கோவில் தெரு, அரண்மனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நீரை அகற்ற நகராட்சி கமிஷனர் விஸ்வநாதனுக்கு கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
மேலும் இந்திராநகர் பகுதியில் செயல்படும் பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண உத்தரவிட்டார்.சப்-கலெக்டர் சுகபுத்திரா, நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் முருகேசன் உட்பட பலர் உடன் சென்றனர்.