பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வழிபாட்டு தலம் கட்டுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி அருகே ஓம்சக்தி கோவில் உள்ளது. இங்கிருந்து, 150 அடி தொலைவில், இன்னொரு மத வழிபாட்டு தலம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அருகில், 'செட்' அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்; நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், ஏ.டி.எஸ்.பி., அனிதா தலைமையில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடந்தது. இதில், ஹிந்து அமைப்பினர் கோவில் அருகே போடப்பட்ட செட்டை அகற்றி விடுவது எனவும், வழிபாட்டு தலத்தை இரண்டு மாதத்துக்குள் அகற்றி விடுவது எனவும், சுமுக முடிவு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.