உடுமலை:விளைநிலங்களில், உயிர் வேலியாகவும், நார் உற்பத்திக்கும், பயன்படும் கற்றாழை குறித்து, வேளாண்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், விளைநிலங்களில், முன்பு உயிர் வேலியாக, 'யானை கற்றாழை' எனப்படும் கற்றாழை பராமரிக்கப்பட்டு வந்தது.இவற்றின் மடல்களின், இருபுறங்களிலும், ரம்பம் போன்று, வரிசையாக, கூரான முட்கள் இருக்கும். அடர்த்தியாக, முட்களுடன் கூடிய இந்த கற்றாழை, வேலிகளில் இருக்கும் போது, கால்நடைகள் உள்ளே வர முடியாது.மேலும், ஆண்டுக்கு ஒரு முறை, நன்கு வளர்ந்த கற்றாழை மடல்களை அறுத்து, தண்ணீரில் ஊற வைத்து நார் பிரித்தெடுப்பார்கள்.இந்த நார், பிளாஸ்டிக் கயிறுகள் அதிகம் பயன்பாட்டுக்கு வரும் முன், வேளாண் அறுவடை பணிகளில், அதிகளவு பயன்பட்டு வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், இவ்வகை கற்றாழை வெகுவாக அழிக்கப்பட்டு கிராமப்புறங்களில், பார்ப்பதே அரிதாகி விட்டது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:உடுமலை பகுதியிலுள்ள விளைநிலங்களில், வரப்புகளிலும், மண்பாதைகளின் ஓரங்களிலும், கற்றாழை அதிகளவு இருந்தது. தாராபுரம் பகுதிகளில், கற்றாழை மடல்களில் இருந்து நார் பிரித்து, கோல்கட்டா உட்பட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.தற்போது, விளைநிலங்களுக்குள், வனவிலங்குகள், புகுவதை தடுக்க உயிர்வேலியாக கற்றாழையை நட்டு பராமரிக்கலாம்; நார் உற்பத்தியை குடிசைத்தொழிலாக மேற்கொள்ள, வேளாண்துறை மூலம் வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.