ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கல்வீசி தாக்கி, வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.
நிவர் புயலால் 6 நாட்களுக்கு பின் நவ.,28 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அன்று மதியம் 12:00 மணிக்கு 5 ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை விரட்டினர்.பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை இழுத்து படகில் வைக்க தாமதம் ஆனதால் இலங்கை வீரர்கள் மீனவர்கள் மீது கற்களால் தாக்கினர்.
மீனவர்கள் படகினுள் மறைந்து கொண்டதால், காயமின்றி தப்பினர். இலங்கை வீரர்கள் மீனவர்கள் வலையை வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.இதனால் 70க்கும் மேலான படகின் வலைகள் மூழ்கியதால், மீன்வரத்து இன்றி வெறும் படகுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் தாக்குதலால், ராமேஸ்வரம் மீனவர்கள் பீதியில் உள்ளனர்.