கடம்பத்துார் : கடம்பத்துார் அருகே, கூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் ஜோராக நடந்து வருகிறது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது கூவம் ஆறு. இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக, சென்னையில் கடலில் கலக்கிறது.இந்த கூவம் ஆற்றை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கூவம் ஆறு, பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ளது.
இதனால், கூவம் ஆற்றில், மழை நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர்.பல இடங்களில், கூவம் ஆற்றில், மணல் திருட்டும் அமோகமாக நடந்து வருகிறது. மணல் திருட்டை தடுக்க வேண்டிய வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், மணல் திருட்டை தடுக்கவும், கருவேல மரங்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.