உடுமலை:உடுமலை அருகே, சித்தக்குட்டையில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால், குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.உடுமலை, தாராபுரம் ரோட்டில் சித்தக்குட்டை உள்ளது. 10 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள இந்த குட்டைக்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பெய்யும் மழை நீர், இக்குட்டையில் தேங்கி, சுற்றுப்புறத்திலுள்ள நுாற்றுக்கணக்கான விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், குடியிருப்புகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது.ஒரு பகுதி கல் குவாரி குழியாகவும் உள்ளதால், ஆண்டு முழுவதும் நீர் இருப்பு காணப்படும்.ஆனால், இக்குட்டையின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்தாலும், குட்டைக்கு நீர் வருவதில்லை.இதனால், ஊராட்சி குப்பை, தொழிற்சாலை கழிவுகள், இக்குட்டையில் கொட்டப்பட்டு, குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரக்கேடும், குப்பைக்கு தீ வைப்பதால், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு வருகிறது.நீர் இல்லாததால், பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து வருகிறது. எனவே, குட்டையில் நீர் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை காலத்தில் நீர் தேங்க வழி செய்யவும், குப்பைக்கிடங்காக குட்டை மாற்றப்படுவதை தடுக்கவும், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.