திருத்தணி; திருத்தணி, முருகன் மலைக்கோவிலில், 1 கோடி ரூபாய் மதிப்பில், முடி காணிக்கை மண்டபம் கட்டி முடித்து, ஓராண்டுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலைக்கோவிலில் நிரந்தர கட்டடம் இல்லை.தற்போது, மாடவீதியில் இலவச கழிப்பறை கட்டடம் அருகே குறுகிய இடத்தில் முடி காணிக்கை செலுத்தப்படுகிறது.இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி, 2018ல், கோவில் நிர்வாகம், நவீன முடி காணிக்கை மண்டபம், 1 கோடி ரூபாய் மதிப்பில், கட்டடப் பணிகள் துவங்கப்பட்டன.நவீன முடி காணிக்கை மண்டபம், ஓராண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், நவீன காணிக்கை மண்டபம் திறக்கப்படாமல் உள்ளதால், பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மலைக்கோவிலில், நவீன முடி காணிக்கை மண்டபத்தில், முடி காணிக்கை செலுத்தும் அறை, கழிப்பறை, குளியல் அறை மற்றும் ஆடைகள் மாற்றுமிடம் என, தனித்தனியாக பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.கட்டப் பணிகள், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நிறைவு அடைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திறப்பு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும்.ஆணையர் உத்தரவு பெற்று, விரைவில் திறந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.