மணவாள நகர் : மணவாள நகர் பகுதியில்,கூவம் ஆற்றில் குப்பை, கழிவுநீர் சூழ்ந்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம், 'அம்போ'வாகி விட்டது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கிறது.இதில், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும், 2 டன் குப்பையை, தினமும், கூவம் ஆறு அருகே உள்ள சுடுகாடு முதல், ஆற்றுப் பகுதியிலும் கொட்டி வருகின்றனர். இதனால், சுடுகாடு பகுதிக்கு இறந்தவர்கள் உடலை எரியூட்ட மற்றும் அடக்கம் செய்ய வருவோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேலும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், கூவம் ஆற்றில் விடப்பட்டுள்ளது. இதனால், கூவம் ஆற்று நீரும் அப்பகுதியைச் சுற்றியுள்ள நிலத்தடி நீரும் கடும் பாதிக்கப்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுக்க வேண்டியபொதுப்பணித் துறையினரும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, கூவம் ஆற்றுப்பகுதியில், குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.