அரூர்: கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவையை துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, விவசாயிகள் நடவு செய்துள்ள கரும்பை, அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவையை துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தண்ணீர் பற்றாக்குறையால், கடந்த சில ஆண்டுகளாக, கரும்பு சாகுபடியின் பரப்பு குறைந்து வருகிறது. நடப்பாண்டு, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 1,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் கரும்பை பதிவு செய்தனர். இதில், கடும் வறட்சியால் பல ஏக்கர் கரும்புகள் காய்ந்து விட்டன. கடந்த காலங்களில், ஆலையில் வழக்கமாக நவ., இரண்டாவது வாரத்தில், கரும்பு அரவை துவங்கப்படும். முன்னதாக, ஆலை திறப்பு குறித்து, கரும்பு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். ஆனால், இதுவரை ஆலோசனை கூட்டம் நடத்தப்படாததுடன், ஆலை திறப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் கரும்புகள் வயலில் சாய்ந்துள்ளன. இவற்றை, எலிகள் கடித்து சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு அரவையை விரைந்து துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.