பட்டினப்பாக்கம்; மந்தைவெளியில், கணவரின் 44 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, மந்தைவெளி, பெரியப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 40; இவர், வட மாநிலங்களில் இருந்து ஜவுளி வாங்கி, மொத்த வியாபாரம் செய்கிறார்.இவரது மனைவி தஸ்மீன், 36; இவர், கோல்கட்டாவைச் சேர்ந்தவர். தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.தஸ்மீனுக்கு, முகநுால் மூலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, 38, என்பவர் பழக்கமாகி உள்ளார்.தமீம் அன்சாரி, மாதத்தில் பாதி நாள், வியாபாரம் விஷயமாக வட மாநிலங்களுக்கு சென்று வந்ததால், தஸ்மீன், ரியாஸ் அகமது பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.சமீபத்தில், தீபாவளி வியாபாரத்தில் வசூலான பணம், 44 லட்சம் ரூபாயை, தமீம்அன்சாரி வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.திடீரென அந்த பணம் மாயமானது. இது தொடர்பாக, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.இதில், தஸ்மீன், 44 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பையை, அவரது கள்ளக்காதலான ரியாஸ் அகமதிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தஸ்மீனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில், இருவரும், பணத்துடன் வெளி மாநிலத்திற்கு சென்று, சந்தோஷமாக வாழ திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இருவரையும், பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, ரியாஸ் அகமதிடம் இருந்து, 41 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.